Saturday, 15 February 2014

நீதிக் கதைகள்- எண்ணுவது உயர்வு




ஒரு ஊரில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பெரிய ஆலமரமொன்றில் ஒரு காகமும், ஒரு புறாவும் நெடுநாட்களாகத் தவம் செய்துக் கொண்டிருந்தன.

அவைகளைப் பார்த்த இறைவன் மனமிரங்கினார். அந்த மலையடிவாரத்தில் அப்பறவைகள் முன் காட்சியளித்தார்.

இறைவனைத் தங்கள் கண் முன்னேக் கண்டதும் புறாவும், காகமும் மகிழ்ச்சியடைந்தன.

பறவைகளே! உங்கள் தவத்தைக் கண்டு என் மனமிரங்கிவிட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன். என்று கூறினார்.

உடனே காகம் இறைவா எனதுக் கருமை நிறம் மாறி என்னுடல் பொன்னிறமாக வேண்டும். என் பொன்னிற இறக்கைகளைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படவேண்டும். அதனைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும். என்று கூறியது.

காகமே உனக்கு உனது எண்ணப்படியே வரம் தந்தேன் என்று கூறியவாறு இறைவன் உடனே புறாவைப் பார்த்தார்.

புறாவும் இறைவா இந்த உலகில் இப்போது எல்லா உயிர்களுக்குமே கருணையுள்ளம் குறைந்து வருகிறது. அன்பும் இல்லாமல், இரக்கமும் இல்லாமல் பலக் கொடிய வழிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான மனப்போக்கெல்லாம் அவர்களை விட்டு மறையவேண்டும். எல்லா நாடுகளும் செழித்து எல்லா மக்களும் நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றது.

இறைவன் புறாவை வியப்போடு பார்த்தார்.

புறாவே உனது நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய வேண்டுகோளை அப்படியே என்னால் நிறைவேற்ற முடியாது. இந்த உலகில் எல்லா உயிரினங்களுக்கும் அவரவர்கள் எண்ணப்படியே வாழ்க்கையமைகிறது. நல்ல எண்ணத்தை உடையவர்கள் நலமடைவார்கள். தீய எண்ணத்தை உடையவர்கள் துன்பமடைவார்கள். அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில்தான் உள்ளது. நீ நல்லெண்ணம் உடையதாக இருக்கின்றாய். எனவே நீ கூறும் நல்ல வார்த்தைகளைக் கேட்கும் அனைவரும் அதை மதித்து நடப்பார்கள். உனக்கு எந்த துன்பமும் ஏற்படாதவாறு நலமாக வாழ வரமளிக்கிறேன். இருவரும் மகிழ்ச்சியாகச் செல்லுங்கள் என்று கூறி மறைந்தார்.

காகத்தின் இறக்கைகள் எல்லாம் உடனே பொன்னிறமாக மாறிவிட்டது. அதனைப் பார்த்து காகம் மட்டற்ற மகிழ்சியடைந்து அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றது.

புறாவும் உற்சாகமடைந்து, மகிழ்ச்சியோடு அந்த இடத்தைவிட்டு பறந்து சென்றது.

புறாவைக் கண்ட மற்ற பறவைகள் எல்லாம் அதனிடம் ஏதோ ஓர் சக்தி இருப்பதாக உணர்ந்தன. புறாவைக் கண்டு வணங்குகின்றன. புறாவும் அந்தப் பறவைகளுக்கெல்லாம் நல்லறிவுரைகளை எடுத்துக் கூறியது. புறா சென்ற இடமெல்லாம் அதற்கு மதிப்புக் கிடைத்தது. புறாவும் மிகவும் மகிழ்ச்சியோடு தமக்குக் கிடைத்த உணவு வகைகளை மற்ற பறவைகளுக்கும் பகிர்ந்துக் கொடுத்தது.

ஒரு நாள் பொன்னிறமான இறக்கைகள் கொண்டக் காகத்தை வேடன் பார்த்தான். உடனே அந்த காகத்தைப் பிடித்துச் சென்று கூண்டிலடைத்து வேடிக்கைப் பொருளாக்கினான்.

வேடன் பிடியில் சிக்கிய காகம் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தது. எனது பேராசை பிடித்து கீழ் தரமான எண்ணத்தால் இறைவனின் வரத்தை வீணாக்கிவிட்டேனே. நானும் புறாவைப் போன்று நல்லெண்ணத்தோடு வரம் கேட்டிருந்தால் இந்தத் துன்பம் நேர்ந்திருக்காதே. இறைவன் சொன்னது உண்மைதான். ஒருவரின் எண்ணப்படியே வாழ்க்கை அமைகிறது. உயர்வான எண்ணம் உடையோர் உயர்ந்த வாழ்க்கையை அடையலாம். தாழ்வான எண்ணம் உடையோர் தாழ்ந்த வாழ்க்கையை அடைவார்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன்என்று தனக்குள் கூறியபடி மனம் வருந்தியது.


எண்ணத்தால் எண்ணம் போல் வாழ்க்கை அமைவதால், நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு வாழ வேண்டும்.

No comments:

Post a Comment